மோட்டார் வாகன ஆய்வாளர் பணி நேர்முக தேர்வை தள்ளிவைக்க ஐகோர்ட்டு உத்தரவு


மோட்டார் வாகன ஆய்வாளர் பணி நேர்முக தேர்வை தள்ளிவைக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 July 2021 10:29 AM GMT (Updated: 10 July 2021 10:29 AM GMT)

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி நேர்முக தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில், 113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணிக்கு எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான தேர்வில், 1,328 பேர் கலந்து கொண்ட நிலையில், 33 பேரை மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைத்துள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, 33 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, எழுத்து தேர்வில் பங்கேற்ற 1,328 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து, தகுதியானவர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைக்க உத்தரவு பிறப்பித்தது.

இதன் அடிப்படையில், 226 பேரை ஜூலை 19-ம் தேதி நேர்முகத்தேர்வுக்கு அழைத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் சிலர், உரிய தகுதியை பெறவில்லை எனக் கூறி, விண்ணப்பதாரர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்த போது, தேர்வு நடைமுறைகளில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கருதுவதால், இந்த தேர்வு நடைமுறைகளில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனக் கூறி, ஜூலை 19-ம் தேதி நடைபெற இருந்த நேர்முகத் தேர்வை தள்ளிவைக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கு முடியும் வரை, மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு நடத்தக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story