வேகமாக கார் ஓட்டி விபத்து நடிகை யாஷிகா ஆனந்த் கைது ஆவாரா? பலியான தோழி பற்றி உருக்கமான தகவல்


வேகமாக கார் ஓட்டி விபத்து நடிகை யாஷிகா ஆனந்த் கைது ஆவாரா? பலியான தோழி பற்றி உருக்கமான தகவல்
x
தினத்தந்தி 27 July 2021 2:19 AM GMT (Updated: 27 July 2021 2:19 AM GMT)

வேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்த் சிகிச்சை முடிந்ததும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. பலியான தோழி பற்றியும் உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகை யாஷிகா ஆனந்த் தனது தோழி வள்ளிச்செட்டி பவனி, ஆண் நண்பர்கள் செய்யது, அமீர் ஆகியோருடன் காரில் புதுச்சேரி சென்று விருந்தில் பங்கேற்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பியபோது மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் தோழி வள்ளிச்செட்டி பவனி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆண் நண்பர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கைதா?

யாஷிகாவுக்கு இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யாஷிகா வேகமாக கார் ஓட்டியதுதான் விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து யாஷிகா மீது வேகமாக கார் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் சிகிச்சை முடிந்ததும் யாஷிகா கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

உருக்கமான தகவல்

இதற்கிடையே விபத்தில் பலியான யாஷிகாவின் தோழி வள்ளிசெட்டி பவனி பற்றி உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

இவர் ஐதராபாத்தை சேர்ந்தவர். அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருந்தார். ஒரு வாரத்துக்கு முன்பு இந்தியா திரும்பிய அவர் சில தினங்களுக்கு முன்பு யாஷிகாவை பார்க்க சென்னை வந்ததாகவும், நீண்ட நாட்களுக்கு பிறகு பவனியை சந்தித்ததால் புதுச்சேரியில் விருந்து வைக்க யாஷிகா அழைத்து சென்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கார் ஓட்டும் வீடியோ

இதற்கிடையே யாஷிகா வேகமாக கார் ஓட்டுவதுபோன்றும், அதை பக்கத்தில் இருந்தவர் வீடியோ எடுப்பது போன்றும் ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் யாஷிகா உள்ளிட்ட யாரும் ‘சீட் பெல்ட்’ அணியவில்லை என்பதால் உயிரிழப்பு மற்றும் படுகாயம் ஏற்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஓட்டுனர் உரிமம் ரத்தா?

யாஷிகா 129 கி.மீ. வேகத்தில் காரை ஓட்டி செல்லும்போது விபத்து நிகழ்ந்துள்ளதாக இ.சி.ஆர். சாலையில் உள்ள வேக கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. எனவே அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

யாஷிகா உடல்நலம் தேறியதும் உரிமத்தை ரத்து செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாமல்லபுரம் போலீசார் தெரிவித்தனர்.

Next Story