ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியினர் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்த ஜனாதிபதி


ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியினர் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்த ஜனாதிபதி
x
தினத்தந்தி 5 Aug 2021 9:06 PM GMT (Updated: 2021-08-06T02:36:02+05:30)

ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியினர் கலைநிகழ்ச்சிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கண்டு ரசித்தார். பின்னர் அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

ஊட்டி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த 3-ந்தேதி வந்தார். இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி ராஜ்பவனில் ஓய்வெடுத்தார். மாலை 5 மணிக்கு மேல் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் ராஜ்பவனில் நடைபெற்றது. இதனை இருக்கைகளில் அமர்ந்தபடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், மகள் சுவாதி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் கண்டு ரசித்தனர். நடனமாடியவர்களை ஜனாதிபதி வாழ்த்தி பாராட்டினார். அப்போது பழங்குடியின மக்கள் ஜனாதிபதிக்கு, அவர்கள் நெய்த சால்வையை நினைவு பரிசாக வழங்கினர்.

தொடர்ந்து ஜனாதிபதி நீலகிரியில் உள்ள தேயிலை விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், நீலகிரியில் பிரதானமான தேயிலை விவசாயம் குறித்து விவசாயிகள் இடையே பேசினார்.

இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது நீலகிரி இயற்கை வேளாண்மை மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது, இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு அரசு திட்டங்களில் முன்னுரிமை கொடுப்பது குறித்து கேட்டறிந்தார். இயற்கை விவசாயத்தில் நீலகிரியை முதன்மை மாவட்டமாக மாற்ற விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

இதற்கிடையே ஜனாதிபதியின் மனைவி சவிதா கோவிந்த், மகள் சுவாதி இருவரும் ஊட்டி அருகே பைக்காராவுக்கு சென்றனர். அங்கு எம்.ஆர்.சி. படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுமார் 20 நிமிடம் படகு சவாரி மேற்கொண்டு இயற்கை அழகு நிறைந்த பைக்காரா அணை மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளை பார்வையிட்டு ரசித்தனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

Next Story