வரும் 16ந்தேதி முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதி; தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பு


வரும் 16ந்தேதி முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதி; தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2021 2:25 PM GMT (Updated: 6 Aug 2021 2:25 PM GMT)

தமிழகத்தில் வரும் 16ந்தேதி முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்து தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.



சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், கடந்த மே மாதம் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா தொற்று 2 மாதத்தில் படிப்படியாக குறைய தொடங்கியது.

இதனால் பல கட்டங்களாக தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்-ரெயில் போக்குவரத்தும் இயக்கப்பட்டன. கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சகஜ நிலைக்கு மெல்ல மெல்ல திரும்ப தொடங்கியது.  இந்த நிலையில் வருகிற 9ந்தேதியுடன் ஊரடங்கு நீட்டிப்பு முடிவுக்கு வர உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. ஆனால் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதியம் சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவிப்பு வெளிவந்துள்ளது.  இதன்படி, ஆகஸ்டு 23ந்தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதேபோன்று, தமிழகத்தில் வரும் 16ந்தேதி முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், 'மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்டு 16ந்தேதியில் இருந்து செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை வெளியிடும்.

இம்மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவ பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கெனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.


Next Story