பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தடுக்க அனைத்து தூய்மை பணிகளும் இரவு நேரங்களிலேயே முடிக்கப்படும்


பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தடுக்க அனைத்து தூய்மை பணிகளும் இரவு நேரங்களிலேயே முடிக்கப்படும்
x
தினத்தந்தி 8 Aug 2021 8:07 PM GMT (Updated: 8 Aug 2021 8:07 PM GMT)

பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தடுக்க சென்னையில் அனைத்து தூய்மை பணிகளும் இரவு நேரங்களிலேயே முடிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பஸ் போக்குவரத்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 387 கி.மீ.நீளமுள்ள 471 பஸ் சாலைகளும், 5 ஆயிரத்து 270 கி.மீ. நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளில் தூய்மை பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், 200 வார்டுகளிலும் தினசரி சேகரிக்கப்படும் சுமார் 5 ஆயிரம் டன் அளவிளான குப்பைகள், பல்வேறு வகையான வாகனங்களை கொண்டு குப்பைகளை கையாளும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. சாலைகளில் தூய்மை பணிகள் பகலில் மேற்கொள்ளப்படும் போதும், குப்பைகள் அகற்றப்படும்போதும் பஸ் மற்றும் உட்புற சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

இரவு நேரங்களில் தூய்மை பணி

இதனை கருத்தில் கொண்டு சாலைகளிலும், உட்புற சாலைகளிலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களின் சார்பில் இரவு நேரங்களில் தூய்மை பணி தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது தூய்மை பணி மேற்கொள்ளும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை துறையின் மூலம் பேட்டரியால் இயங்கும் 255 வாகனங்கள், 53 மூன்று சக்கர வாகனங்கள், 23 டிப்பர் லாரிகள் மற்றும் 1,786 தூய்மை பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

எனவே பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் கூடுதல் வாகனங்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு அனைத்து தூய்மை பணிகளையும் இரவு நேரங்களிலேயே முடித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறுமின்றி பணிகளை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூற்ப்பட்டுள்ளது.

Next Story