‘உங்கள் துறையில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ் சென்னை போலீசாருக்கான குறைதீர்ப்பு முகாம்


‘உங்கள் துறையில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் சென்னை போலீசாருக்கான குறைதீர்ப்பு முகாம்
x
தினத்தந்தி 2 Oct 2021 7:26 PM GMT (Updated: 2 Oct 2021 7:26 PM GMT)

சென்னை போலீசாருக்கான குறைதீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. போலீசாரிடம் கமிஷனர் சங்கர் ஜிவால் மனுக்களை வாங்கினார்.

சென்னை,

‘உங்கள் துறையில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் கீழ் போலீசாருக்கு குறைதீர்ப்பு முகாம் நடத்தி, அதன்மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர கமிஷனர்களுக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் போலீசார் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு அவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போலீசார் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடந்தது.

இதில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். அவர்களுடைய கோரிக்கை மனுக்களை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மாலை 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை நேரடியாக பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் சங்கர் ஜிவால் பேசியதாவது:-

போலீசார் தந்த அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு குறைகளுக்கு தீர்வு காணப்படும். இந்த மனுக்களில் தீர்வு காணப்பட்ட மனுக்கள், தீர்வு காணப்படாத மனுக்கள் என வகைபடுத்தப்பட்டு, அதுகுறித்த அறிக்கை வருகிற 16-ந் தேதி டி.ஜி.பி. அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

போலீசார் குறைதீர்ப்பு முகாமில் மொத்தம் 1,359 மனுக்கள் பெறப்பட்டன. இதில் இடமாறுதல் குறித்த மனுக்கள் அதிகளவில் இருந்தன.

Next Story