சட்டசபை தேர்தலின்போது மோதல்: அமைச்சர் சேகர்பாபு மீதான வழக்குக்கு தடை


சட்டசபை தேர்தலின்போது மோதல்: அமைச்சர் சேகர்பாபு மீதான வழக்குக்கு தடை
x
தினத்தந்தி 8 Oct 2021 11:43 PM GMT (Updated: 8 Oct 2021 11:43 PM GMT)

சட்டசபை தேர்தலின்போது மோதல்: அமைச்சர் சேகர்பாபு மீதான வழக்குக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தமிழக சட்டசபைக்கு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது சென்னை கொடுங்கையூரில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் மாறிமாறி கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்படி தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, லோகநாதன், கணேசன், சரஸ்வதி, பிரபு ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அ.தி.மு.க.வினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு 2019-ம் ஆண்டு முதல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தற்போது சேகர்பாபு, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ளார். இந்தநிலையில் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் சேகர்பாபு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 22-ந் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Next Story