வடிவேலு பட பாணியில் அனைத்து சின்னத்திலும் ஒரு குத்து


தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது எடுத்த படம்.
x
தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது எடுத்த படம்.
தினத்தந்தி 12 Oct 2021 10:16 AM GMT (Updated: 12 Oct 2021 10:16 AM GMT)

பல்வேறு ஒன்றியங்களில் வாக்குச்சீட்டில் உள்ள அனைத்து சின்னத்திலும் சிலர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து வருகின்றனர்.

 மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இதுதவிர, 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில், வடிவேலு பட காமெடி பாணியில் நபர் ஒருவர் அனைத்து சின்னங்களுக்கும் பாரபட்சமின்றி வாக்களித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

வாக்குகள் எண்ணப்பட்ட போது வடிவேலு காமெடியில் “தென்னைமரத்துல ஒரு குத்து.. ஏணியில ஒரு குத்து” என சொல்வது போல, நபர் ஒருவர் வாக்கு சீட்டில் உள்ள மாம்பழம் சின்னத்தைத் தவிர்த்து, மற்ற அனைத்து சின்னங்களுக்கும் வாக்களித்திருந்தார்.

இதனால் அது செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் இந்த மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் வாக்குச்சீட்டில் உள்ள அனைத்து சின்னத்திலும் சிலர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

* கடலூர் மாவட்டம் தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் மகாவதி என்பவர் வெற்றி பெற்றார்

மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த நாகூரான் என்பவர் காலமானதை அடுத்து, அந்த பதவிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதில், ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவராக இருந்த நாகூரானின் மனைவி மகாவதி உட்பட 4 பேர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 828 வாக்குகளில் மகாவதி 268 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கலையரசி 266 வாக்குகளை பெற்ற நிலையில், 2 வாக்குகள் வித்தியாசத்தில் மகாவதி வெற்றி பெற்றார். 

* நெல்லை மாவட்டம் களக்காடு ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் 1வது வார்டு   ஜார்ஜ் கோசல், 3வது வார்டு விசுவாசம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.



Next Story