ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்ற பாஜக சார்பு வேட்பாளர்


ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்ற பாஜக சார்பு வேட்பாளர்
x
தினத்தந்தி 12 Oct 2021 3:20 PM GMT (Updated: 12 Oct 2021 3:48 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக சார்பு வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார்.

கோவை,

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் குருடம்பாளையம் கிராம ஊராட்சிக்கு உள்பட 9-வது வார்ட்டில் தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்தம் 1551 வாக்குகள் உள்ளன. ஆனால், தேர்தலன்று மொத்தம் 913 வாக்குகள் பதிவானது. 

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் திமுக கட்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் 387 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவருக்கு அடுத்தபடியாக திமுக அதிருப்தி வேட்பாளராக களமிறங்கிய ஜெயராசு 240 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பெற்றார். 

அதிமுக கட்சியை சேர்ந்த வைத்தியலிங்கம் 196 வாக்குகளை பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இவர்கள் அனைவரும் கட்சிகளை சேர்ந்துள்ள போதும் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளனர். இதே வார்ட்டில் பாஜக சார்பு வேட்பாளராக கார்த்திக் என்பவர் போட்டியிட்டார். பாஜகவை சேர்ந்த இவர் கார் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார். இவர் கோவை மாவட்ட வடக்கு பகுதி பாஜக இளைஞரணி துணைத்தலைவராக உள்ளார்.  

இந்நிலையில், வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட கார்த்திக் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். வார்டு உறுப்பினர் தேர்தலில் பாஜக சார்பு வேட்பாளர் ஒரேஒரு வாக்குமட்டுமே பெற்று படுதோல்வியடைந்த சம்பவம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில், கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு குருடம்பாளையம் கிராம ஊராட்சியில் 4-வது வார்டு பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 9-வது வார்டு பகுதியில் ஓட்டு போடுவதற்கான உரிமை இல்லை.

Next Story