மக்களின் கோரிக்கையை ஏற்று கோவில்கள் திறப்பு அமைச்சர் சேகர்பாபு பேட்டி


மக்களின் கோரிக்கையை ஏற்று கோவில்கள் திறப்பு அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x
தினத்தந்தி 15 Oct 2021 11:21 PM GMT (Updated: 15 Oct 2021 11:21 PM GMT)

கோவில்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்கப்படும் என அறிவித்த முதல்-அமைச்சருக்கு மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அனைத்து மதத்தினரும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் வழிபாட்டு தலங்களை திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மதத்தினரும் நெஞ்சம் நிறைந்து பாராட்டி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. அழுத்தமா?

கோவில்களை திறக்க பா.ஜ.க. கொடுத்த அழுத்தம் தான் காரணம் என அக்கட்சியினர் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு சேகர்பாபு, ‘கட்டுப்பாடு இல்லாத ஆட்சிக்கு தான் அழுத்தம் தேவைப்படும். ஆய்வு கூட்டம் நடத்திய பிறகே கோவில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அழுத்ததிற்கு அடிபணியும் ஆட்சி கிடையாது, மக்களுக்கு அழுத்தம் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது; மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. அவர்கள் கூறுவது கனிந்த கனியை தடியால் அடித்து விழ வைப்பது போல் இருக்கிறது' என்றார்.

Next Story