ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவில் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?


ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவில் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?
x
தினத்தந்தி 18 Oct 2021 9:25 PM GMT (Updated: 18 Oct 2021 9:25 PM GMT)

ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவில் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமான பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சேவியர் பெலிக்ஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “கோவிலுக்கு சொந்தமான 83.26 ஏக்கர் நிலத்தில், 21 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு, வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த நிலத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது” என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், எந்த அடிப்படையில் கோவில் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டன என்பது குறித்தும் 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை நவம்பர் 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story