10, 12-ம் வகுப்புகளுக்கு தேர்வு: மாணவர்கள் தேர்வு மைய நகரத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு


10, 12-ம் வகுப்புகளுக்கு தேர்வு: மாணவர்கள் தேர்வு மைய நகரத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2021 3:01 AM (Updated: 21 Oct 2021 3:01 AM)
t-max-icont-min-icon

10, 12-ம் வகுப்புகளுக்கு முதல் பருவ தேர்வு மாணவர்கள் தேர்வு மைய நகரத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை, 

கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், கல்வி அமர்வை இரண்டாக பிரிப்பது, 2 பருவங்களாக பொதுத்தேர்வை நடத்துவது, பாடத்திட்டங்களை பகுத்தறிவது ஆகியவை நடைமுறைப்படுத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கடந்த ஜூலை மாதம் அறிவித்து இருந்தது.

அதன்படி, சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் சில மாணவர்கள் பள்ளி அமைந்திருக்கும் நகரத்தில் இருந்து வேறுநகரத்தில் வசிப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் ஒரு அறிவிப்பை நேற்று வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சில மாணவர்கள் தங்கள் பள்ளி அமைந்திருக்கும் நகரங்களில் இல்லை என்றும், வேறு நகரங்களில் வசிக்கிறார்கள் என்றும் வாரியத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பொருத்தமான நேரத்தில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு தேர்வு மைய நகரத்தை மாற்ற அந்தந்த பள்ளிகளுக்கு அவர்கள் கோரிக்கை வைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.

ஆன்லைன் மூலம் அந்த கோரிக்கையை சி.பி.எஸ்.இ. கொடுத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்றி பதிவு செய்ய வேண்டும். அதற்கு மாணவர்களும், பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. இணையதளத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். அட்டவணை தயாரான பிறகு தேர்வு மையம் அமைந்துள்ள நகரத்தை மாற்றுவதற்கான எந்த கோரிக்கையும் வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 More update

Next Story