பெரிய கோவில்களோடு வருவாய் குறைவான கோவில்களை இணைக்க நடவடிக்கை சேகர்பாபு பேட்டி


பெரிய கோவில்களோடு வருவாய் குறைவான கோவில்களை இணைக்க நடவடிக்கை சேகர்பாபு பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2021 7:17 PM GMT (Updated: 22 Oct 2021 7:17 PM GMT)

வருவாய் குறைவாக உள்ள கோவில்கள், வருவாய் அதிகம் உள்ள கோவில்களோடு இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம், பாப்பான்சத்திரம் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால்சாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உயதகிரி சாமைய்யா ஜமீன்தார் என்பவரின் மகன் வெங்கைய்யா என்பவர் இந்த கோவில்களுக்கு பூஜைகள் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து தடையின்றி நடத்துவதற்கு இரண்டு ஜமீன் கிராம நிலங்களை உயில் சாசனமாக 177 ஏக்கர் இடத்தை 1984-ல் கோவிலுக்கு வழங்கியுள்ளார். இதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை மீட்டெடுக்க இந்து சமய அறநிலையத்துறை வருவாய் துறையுடன் இணைந்து மீட்பு பணிகளை தொடங்கி இருக்கிறது.

கோவில்கள் இணைக்கப்படும்

கோவில்களில் சாமி தரிசனம் செய்தால் மனம் இலகுவாகும். ஆனால், இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த பின்பு, கோவில் சிதிலடைந்து உள்ளதை கண்டு மனம் கனமாக மாறி உள்ளது. இந்த கோவில் புனரமைப்பு மற்றும் திருப்பணிகள் மேற்கொண்டு விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும்.

இரண்டு குளங்கள் ஊராட்சி வசம் உள்ளது. அதனை மீட்டு சீரமைக்கப்படும். குருக்கள் இல்லம், சின்ன, பெரிய என இரண்டு சத்திரங்கள் 20 வருடங்களாக இடிந்த நிலையில் உள்ளது. அதனை பழமை மாறாமல் கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டிட வரைபடம் தயார் செய்ய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் பிரசித்தி பெற்ற ருத்ராட்ச பந்தலில் இருந்து சாமி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று வந்தது. கடந்த பல வருடங்களாக ருத்ராட்ச பந்தல் உடைந்த நிலையில் உள்ளதால் அபிஷேகம் நடைபெறவில்லை. பந்தல் சரி செய்யப்பட்டு மீண்டும் அபிஷேகம் நடைபெறும். வருவாய் குறைவாக உள்ள கோவில்கள், வருவாய் அதிகம் உள்ள கோவில்களோடு இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஒளியேற்றுவார்

இறைப்பணிக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துள்ள அர்ச்சகர்கள் வாழ்வில் முதல்-அமைச்சர் ஒளியேற்றுவார். இக்கோவில் அர்ச்சகர்களுக்கு ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான 177 ஏக்கர் இடத்தின் பெயரில் வழக்கு கோர்ட்டில் இருந்தாலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம்.

குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்கள் தரப்பில் இருந்தும் விளக்கம் தந்துள்ளனர். மேலும் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தி உள்ளோம். அந்த நிலத்தை அரசு மீட்கும் பணியை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், காஞ்சீபுரம் மண்டல இணை ஆணையர் ஜெயராமன், காஞ்சீபுரம் மண்டல உதவி ஆணையர் ஜெயா, கோவில் குருக்கள் சுந்தரம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story