கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கழுத்தை அறுத்து கொலை


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கழுத்தை அறுத்து கொலை
x
தினத்தந்தி 23 Oct 2021 8:57 AM GMT (Updated: 23 Oct 2021 8:57 AM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். தற்கொலை நாடகமாடிய மனைவியையும், இவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த உனிசெட்டியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 37). சரக்கு வாகன டிரைவர். இவரது மனைவி ரூபா (25). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இதனிடையே அய்யப்பனின் உறவினரான ஜவளகிரியை அடுத்த மஞ்சுகிரியை சேர்ந்த தங்கமணி (20), அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது ரூபாவுக்கும், தங்கமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

கடந்த 3 மாதத்திற்கு முன்பு தங்கமணியுடன், ரூபா ஓட்டம் பிடித்தார். உறவினர்கள் அவர்களை தேடி கண்டுபிடித்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழைத்து வந்தனர். மனைவி பிரிந்து சென்றதால் வேதனையில் அய்யப்பன் மது பழக்கத்துக்குஅடிமையானார்.

அதன்பிறகு ரூபாவிற்கும், அய்யப்பனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. மது போதையில் இருந்த அய்யப்பன் தூக்க மாத்திரைகளை சாப்பிட முயன்ற போது உறவினர்கள் தடுத்தனர்.

அதன் தொடர்ச்சியாக அவர் தூக்குப்போட முயன்றதையும் உறவினர்கள் தடுத்தனர். இந்தநிலையில் இரவில் அய்யப்பன் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது கையில் கத்தியும் இருந்தது. இதுகுறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் அங்கு சென்று அய்யப்பனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டதாக ரூபா தெரிவித்தார். ஆனால் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ரூபா, அவருடைய கள்ளக்காதலன் தங்கமணி உதவியுடன், அய்யப்பனை தீர்த்து கட்டியது தெரியவந்தது. இதையடுத்து ரூபாவையும், தங்கமணியையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான ரூபா போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-

எனக்கும், தங்கமணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். எங்களது கள்ளக்காதல் விவகாரம் எனது கணவருக்கு தெரியவந்தது. இதனால் நான் எனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்றேன். பின்னர் என்னை உறவினர்கள் மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்தனர்.

இதன் பிறகு எனது கணவர் என்னுடன் தொடர்ந்து தகராறு செய்து வந்தார். இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். இதுகுறித்து எனது கள்ளக்காதலன் தங்கமணியிடம் கூறினேன். மேலும், என்னிடம் மது போதையில் கணவர் தகராறு செய்ததையும், 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்றதையும்கூறினேன்.

2 முறை அவர் தற்கொலைக்கு முயன்றதால், அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டால் அதை தற்கொலை என நம்ப வைத்து விடலாம் என நாங்கள் திட்டம் போட்டோம். அதன்படி இரவு மது போதையில் இருந்த கணவரின் கை, கால்களை துப்பட்டாவால் கட்டி விட்டு, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். பிறகு கத்தியை அவரது கையில் வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

பின்னர் அருகில் உள்ள எனது மாமியார் வீட்டுக்கு சென்று, அய்யப்பன் என்னை அடித்து விரட்டி விட்டார் என கூறினேன். சிறிது நேரத்துக்கு பின்பு கணவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார் என கூறி அனைவரையும் நம்ப வைத்தேன். ஆனால் போலீசார் விசாரணையில் நான் கொலை செய்ததை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு ரூபா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கைதான ரூபா, கள்ளக்காதலன் தங்கமணி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலன் உதவியுடன் மனைவியே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story