மெகா தடுப்பூசி முகாம்: 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


மெகா தடுப்பூசி முகாம்: 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 23 Oct 2021 10:26 AM GMT (Updated: 23 Oct 2021 10:26 AM GMT)

மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதாரப் பணியாளர்களை தொடர்ந்து தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி ‘டோஸ்’ தடுப் பூசி போடப்பட்டு உள்ளது.

தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது. அதிக பேருக்கு தடுப்பூசி போட வசதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் பல இடங்களில் கூடுதலாக மையங்கள் அமைத்து மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது.

அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரம் பேரும், 3-வது முகாமில் 24 லட்சத்து 85 ஆயிரம் பேரும், 4-வது முகாமில் 17 லட்சத்து 19 ஆயிரம் பேரும், 5-வது முகாமில் 22 லட்சத்து 85 ஆயிரம் பேரும் என மொத்தம் 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் பேர் இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பயன்பெற்று உள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் 6-வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமையில் மது அருந்துபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக்கூடாது என்கிற தவறான தகவல் இருப்பதால், அவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை முகாம் நடத்தப்படுகிறது. 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும் இந்த முகாமில், 2-வது தவணை தடுப்பூசி போடும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதமாக இடைவெளியின்றி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொற்று எண்ணிக்கை குறைகிறது என மக்கள் அலட்சியம் காட்டாமல் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்.

கொரானா தடுப்பு பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செலுத்துகிற ஆர்வம், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர் எடுக்கும் முடிவுகள் மக்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது என்றார்.

Next Story