ஆடு மேய்க்கச்சென்ற பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 2 பேர் கைது


ஆடு மேய்க்கச்சென்ற பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2021 8:36 PM GMT (Updated: 26 Oct 2021 8:36 PM GMT)

அம்மாப்பேட்டை அருகே ஆடு மேய்க்கச்சென்ற பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதரில் கிடந்த பெண் பிணம்

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒருவரின் 32 வயது மகளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனது பெற்றோருடன் வசித்து வந்த அந்த பெண், தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடுகளை வீட்டின் அருகே உள்ள வடவாற்றின் கரையில் மேய்த்து வருவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் ஆடு, மாடுகளை மேய்க்க ஓட்டிச்சென்ற அந்த பெண் மாலையில் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் இரவு 7 மணி அளவில் வடவாறு கீழ்கரையில் உள்ள ஒரு புதரில் அந்த பெண் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள் வடவாற்று கரையில் கிடந்த மீன் பிடிக்கும் தூண்டில் கம்பியை கைப்பற்றினர்.

பாலியல் பலாத்காரம் செய்து கொலை

இதுதொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த பெரியசாமி(28) என்பவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

போலீசாரின் விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

பெரியசாமியும், அதே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்(25) என்பவரும் வடவாற்றில் தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டு இருந்து உள்ளனர். அப்போது வடவாற்று கரையில் அந்த பெண் தனியாக ஆடு மேய்த்துக்கொண்டு இருந்ததை பார்த்துள்ளனர். உடனே அவர்கள், அந்த பெண்ணை அந்த பகுதியில் உள்ள மறைவான பகுதிக்கு தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்.

இந்த தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

2 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி, ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story