தமிழகத்தில் 8 ஆயிரத்து 75 ஏரிகள் நிரம்பின அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்


தமிழகத்தில் 8 ஆயிரத்து 75 ஏரிகள் நிரம்பின அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 30 Nov 2021 11:11 PM GMT (Updated: 30 Nov 2021 11:11 PM GMT)

தமிழகத்தில் பயிர் சேதங்கள் கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும், 8 ஆயிரத்து 75 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் மொத்தம் உள்ள 14 ஆயிரத்து 138 ஏரிகளில், 8 ஆயிரத்து 75 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. 2 ஆயிரத்து 806 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224.297 டி.எம்.சி.யில் 209.945 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது 93.60 சதவீதம் ஆகும்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து ஆகியவை கணக்கிடப்பட்டு, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான 5 நீர்த்தேக்கங்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள இதர அணைகளில் இருந்து, நீர் திறப்பு குறித்து பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு அளித்து, பாதுகாப்பான அளவு நீரை நீர்த்தேக்கங்களில் இருப்பு வைத்துக்கொண்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக அவ்வப்போது உபரிநீர் திறந்துவிடப்பட்டதால், பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

பயிர் சேதங்கள் கணக்கிடும் பணி

டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து வருவாய், வேளாண், தோட்டக்கலை துறைகள் மூலம் கணக்கிடும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் மொத்தம் 279 முகாம்களில், 20 ஆயிரத்து 836 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 2 ஆயிரத்து 148 பேர், 15 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று (நேற்று) காலை 1 லட்சத்து 20 ஆயிரத்து 160 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

குடிசைகள், வீடுகள் சேதம்

கடந்த 24 மணி நேரத்தில் 522 கால்நடைகளும், 3 ஆயிரத்து 847 கோழிகளும் இறந்துள்ளன. 2 ஆயிரத்து 623 குடிசைகள் பகுதியாகவும், 168 குடிசைகள் முழுமையாகவும் என மொத்தம் 2 ஆயிரத்து 791 குடிசைகளும், 467 வீடுகள் பகுதியாகவும், 7 வீடுகள் முழுமையாகவும் என மொத்தம் 474 வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை நீர் தேங்கியுள்ள 561 பகுதிகளில் 227 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 334 பகுதிகளில் அதிக திறன் கொண்ட பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 8 ஆயிரத்து 571 புகார்கள் வரப்பெற்று 2 ஆயிரத்து 681 புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளன. எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு 7 ஆயிரத்து 247 புகார்கள் வரப்பெற்றதில் 5 ஆயிரத்து 670 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற 5 ஆயிரத்து 332 புகார்களில் 5 ஆயிரத்து 195 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, வருவாய் நிர்வாக கமிஷனர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மை இயக்குனர் டாக்டர் என்.சுப்பையன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story