மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 1 Dec 2021 12:16 AM GMT (Updated: 1 Dec 2021 12:16 AM GMT)

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதுடன், சீரமைப்பு, நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று காலை சென்னை, செம்மஞ்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சிறப்பு மருத்துவ முகாம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட அப்பகுதிகளுக்கு நடந்து சென்று, அப்பகுதி மக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அத்துடன் மழைநீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, செம்மஞ்சேரி, குமரன் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கோவிட் தடுப்பூசி முகாம்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அவர் வழங்கினார்.

பின்னர், ஒக்கியம் மேட்டில் உள்ள காரப்பாக்கம் ஏரியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

முன்னதாக, 29-11-2021 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட போது, குட்வில் நகர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அக்குடியிருப்பு பகுதியை பார்வையிட்டார். உடனடியாக அங்கு தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்ற அலுவலர்களுக்கு ஆணையிட்டதன் அடிப்படையில் மின் மோட்டார்களைக் கொண்டு தேங்கியிருந்த மழைநீர் அகற்றும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அங்கு நீர்வடிய வைக்கப்பட்டது.

பின்னர், நேற்று காலை அப்பகுதி மக்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது நிலைமை சீர் செய்யப்பட்டதா? என கேட்டறிந்தார். உடனடி நடவடிக்கைக்காக அப்பகுதி பொதுமக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story