புழல் சிறையில் ராம்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரிக்க ஐகோர்ட்டு தடை


புழல் சிறையில் ராம்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரிக்க ஐகோர்ட்டு தடை
x
தினத்தந்தி 1 Dec 2021 9:21 PM GMT (Updated: 1 Dec 2021 9:21 PM GMT)

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் நடத்தி வரும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பெண் என்ஜினீயர் சுவாதி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர், மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறை நிர்வாகம் அறிவித்தது. ஆனால், ராம்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

தற்கொலை

இந்த விசாரணைக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில், புழல் சிறையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்ற அன்பழகன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

புழல் சிறையில் 2016-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி ஓய்வு பெறும் வரை பணியாற்றினேன். 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையில் இருந்தேன். ராம்குமார் உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு பேச்சிமுத்து என்ற வார்டன் காவலுக்கு நின்றார். அவரிடம் குடி தண்ணீர் எடுக்க போகிறேன் என்று கூறி சிறை அறையில் இருந்து வெளியில் வந்த ராம்குமார் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மின்சார வயரை கடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மேல்நடவடிக்கை தேவையில்லை

அங்கிருந்த வார்டன், தன் லத்தியை பயன்படுத்தி மின்சார இணைப்பை துண்டித்து, ராம்குமாரை காப்பாற்றினார். இந்த சம்பவத்தை ‘வாக்கிடாக்கி’ மூலம் தகவல் தெரிவித்தார். உடனே நான் சிறைக்குள் சென்று விசாரணை நடத்தினேன். சிறை டாக்டரை கொண்டு ராம்குமாருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தேன். அதன்பின்னர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ராம்குமார் இறந்து விட்டார்.

அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள், மின்சாரம் தாக்கிதான் ராம்குமார் இறந்தார் என்று அறிக்கை கொடுத்துள்ளனர். அப்போதைய திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டும், இதுகுறித்து விசாரணை நடத்தி, ராம்குமார் மின்சாரம் தாக்கி இறந்ததாக அறிக்கை கொடுத்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் ராம்குமார் மரணம் குறித்து மேல் நடவடிக்கை தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

குறுக்கு விசாரணை

இந்த நிலையில், ராம்குமார் மரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆனால், மனித உரிமை ஆணைய விதிகளின்படி, சம்பவம் நடந்து ஒரு ஆண்டுக்குள் இதுபோல விசாரணைக்கு எடுக்க முடியும். ஆனால், 2016-ம் ஆண்டு ராம்குமார் மரணம் குறித்து, 2020-ம் ஆண்டு ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

அதுமட்டுல்ல திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டாக இருந்தவரை ராம்குமாரின் தந்தை பரமசிவனின் வக்கீல் குறுக்கு விசாரணை செய்துள்ளார்.

கொலை

மாஜிஸ்திரேட்டு விசாரணை அறிக்கையைத்தான் மனித உரிமை ஆணையம் பரிசீலிக்க முடியுமே தவிர மாஜிஸ்திரேட்டை குறுக்கு விசாரணை செய்ய உத்தரவிட முடியாது. மேலும், சுவாதியை 3 பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். ஆனால், ராம்குமார் மீது பொய் வழக்கை போலீசார் போட்டு விட்டனர் என்று அவரது வக்கீல் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கிறார். அதாவது ராம்குமார் கொலை செய்யப்பட்டது போல திசை திருப்புகின்றனர்.

இந்த நிலையில், என்னை விசாரணைக்கு ஆஜராகும்படி மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும். நேரில் ஆஜராக எனக்கு விலக்கு அளிக்க வேண்டும். மனித உரிமை ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இடைக்கால தடை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் ஆகியோர் ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் நடத்தி வரும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர்.

இந்த வழக்கிற்கு மனித உரிமை ஆணையத்தின் பதிவாளர், ராம்குமாரின் தந்தை பரமசிவன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Next Story