அமைப்புசாரா தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு ரூ.12.35 கோடி நலத்திட்ட உதவி - மு.க.ஸ்டாலின் வழங்கினார்


அமைப்புசாரா தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு ரூ.12.35 கோடி நலத்திட்ட உதவி - மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 1 Dec 2021 10:13 PM GMT (Updated: 1 Dec 2021 10:13 PM GMT)

அமைப்புசாரா தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு ரூ.12.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

தமிழகத்தில் திறன்மிக்க தொழிலாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 90 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், புதிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களை தொடங்குதல் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் இருந்து நெய்வேலியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 3 கோடியே 84 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் பணிமனை கட்டிடங்கள், நாகப்பட்டினம் மாவட்டம், செம்போடை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் இருந்து 8 கோடியே 18 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், பணிமனை கட்டிடங்கள் மற்றும் விடுதி கட்டிடங்கள், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையம், சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 9 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 விடுதி கட்டிடங்கள் என மொத்தம் 21 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி திறந்து வைத்தார்.

50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி

தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடிகளுக்கான உதவித்தொகை, மாதாந்திர ஓய்வூதியத் தொகை, இயற்கை மற்றும் விபத்து மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 31 ஆயிரத்து 428 பயனாளிகளுக்கு 6 கோடியே 35 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயும், மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகையாக 17 ஆயிரத்து 338 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 78 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 1,659 பயனாளிகளுக்கு 3 கோடியே 92 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயும், திருமண உதவித்தொகை, கண்கண்ணாடி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, குடும்ப ஓய்வூதிய உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை என மொத்தம் 50 ஆயிரத்து 721 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 12 கோடியே 35 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆர்.கிர்லோஷ்குமார், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவ ராவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story