தமிழகத்துக்கு 11.6 லட்சம் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி விரைவில் வருகை


தமிழகத்துக்கு 11.6 லட்சம் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி விரைவில் வருகை
x
தினத்தந்தி 3 Dec 2021 7:47 PM GMT (Updated: 3 Dec 2021 7:47 PM GMT)

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.

சென்னை,

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலம், ஆமதாபாத் ‘ஜைடஸ் கேடிலா’ நிறுவனம், ‘ஜைகோவ்  டி’ தடுப்பூசியை தயாரித்துள்ளது. உலகின் முதல் டி.என்.ஏ. அடிப்படையிலான இந்த தடுப்பூசியை செலுத்துவதற்கு ஊசி தேவையில்லை.

அதற்கு பதிலாக வலியில்லாத ‘ஜெட்’ என்ற உபகரணம் வாயிலாக செலுத்தப்படும். இந்த தடுப்பூசி 28 நாட்கள் இடைவெளியில் 3 தவணையாக போடப்படும். இந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அந்த நிறுவனத்திடமிருந்து மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க உள்ளது.

இந்தநிலையில் முதற்கட்டமாக தமிழகம், பீகார், மராட்டியம், பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்பட 7 மாநிலங்களில் இந்த வகை தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக 11.6 லட்சம் ‘ஜைகோவ்  டி’ தடுப்பூசிகள் விரைவில் தமிழகம் வர உள்ளது. இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நர்ஸ்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும், மத்திய அரசு வழங்கும் இந்த தடுப்பூசியை பொதுமக்கள் விரும்பினால் போட்டு கொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story