தமிழகத்தில் 7-ந்தேதி முதல் வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் 7-ந்தேதி முதல் வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2021 11:19 PM GMT (Updated: 3 Dec 2021 11:19 PM GMT)

உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பனிமூட்டம் ஏற்படும் என்றும், தமிழகத்தில் வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘ஜாவத்' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இது இன்று (சனிக்கிழமை) காலை வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோர பகுதியை நெருங்கக்கூடும். அதனைத்தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையையொட்டி நகரும் என்று ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரிய அளவில் மழை இருக்காது.

ஆனால் அதே நேரத்தில் தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் இன்று (சனிக்கிழமை) பெய்யக்கூடும்.

ஓரிரு இடங்களில் கனமழை

நாளை (ஞாயிற்றுக்கிழமை) சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினம் (திங்கட்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.

வறண்ட வானிலை

மேலும், வருகிற 6 மற்றும் 7-ந்தேதிகளில் தமிழகத்தின் உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அதிகாலையில் லேசான பனி மூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வழக்கமாக பனி மூட்டம் காணப்பட்டால் மழைக்கான வாய்ப்பு குறையும் என்று கூறுவார்கள். அந்தவகையில் 7-ந்தேதி முதல் வறண்ட வானிலையே இருக்கும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த வாரம் காற்றழுத்த தாழ்வு

அதனைத்தொடர்ந்து இம்மாதத்தின் 2-வது வாரத்துக்கு பிறகு வங்ககடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ‘ஆயிக்குடி 8 செ.மீ., சேரன்மகாதேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 7 செ.மீ., கன்னியாகுமரி, சிவகிரி தலா 6 செ.மீ., பெரியார் 5 செ.மீ., சுருளக்கோடு, கொட்டாரம், அம்பாசமுத்திரம், நாகர்கோவில், சிவலோகம் தலா 4 செ.மீ., நாங்குநேரி, கோவை, மணிமுத்தாறு, சங்கரன்கோவில் தலா 3 செ.மீ.' உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.

Next Story