தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 5 Dec 2021 12:25 AM GMT (Updated: 5 Dec 2021 12:25 AM GMT)

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்யும் இடங்கள்

வடகிழக்கு பருவமழை காலமான தற்போது தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (திங்கட்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மழைக்கு வாய்ப்பு

ஏற்கனவே சில இடங்களில் பனி மூட்டம் நிகழ்வதால், நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், நாளை மறுதினம் ஒருநாள் மட்டும் அவ்வாறு வறண்ட வானிலை இருக்கும் என்றும், அதற்கு மறுநாள் (8-ந் தேதி) மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் 8-ந் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த ‘ஜாவத்' புயல் வலுவிழந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரையோரத்தில் நிலைக்கொள்ளும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story