கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. நிரம்பி வழிந்த படகு போக்குவரத்து!


கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. நிரம்பி வழிந்த படகு போக்குவரத்து!
x
தினத்தந்தி 29 Dec 2021 5:43 AM GMT (Updated: 29 Dec 2021 5:43 AM GMT)

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி,

கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி கடல் நடுவில்  பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். 

இவற்றை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. 

இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.  சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை ஆர்வமுடன் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

கடந்த 2 நாட்கள் மட்டும் பயங்கர சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டதால், படகு போக்குவரத்து தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. அந்த 2 நாட்கள் மட்டும் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. 

கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான கடந்த 25-ந்தேதி 8 ஆயிரத்து 840 பேரும்,  26-ந்தேதி 9 ஆயிரத்து 727பேரும்,  27-ந்தேதி 5 ஆயிரத்து 364 பேரும், நேற்று 3 ஆயிரத்து 313 பேரும், இன்று நண்பகல் வரை 3000 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story