சிறந்த கைவினைஞர்களுக்கு விருது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


சிறந்த கைவினைஞர்களுக்கு விருது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 13 April 2022 9:17 PM GMT (Updated: 13 April 2022 9:17 PM GMT)

தமிழகத்தில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு ‘வாழும் கைவினை பொக்கிஷம்’ விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

சென்னை,

கைவினை தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு தமிழக அரசால் ‘வாழும் கைவினை பொக்கிஷம்’ எனும் விருது வழங்கப்படுகிறது. கைவினைஞர்களை பாராட்டுவதற்கும், அவர்களின் திறனை ஊக்குவிப்பதற்கும், அதன் மூலம் திறனை வெளிகொணர்ந்து மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும் தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழகத்தால் இவ்விருது ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. வாழும் கைவினை பொக்கிஷம் விருதுக்காக இந்த ஆண்டு 10 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவுக்கும் ஒருவர் வீதம் மொத்தம் 10 பேருக்கு 8 கிராம் தங்கப்பதக்கம், தாமிர பத்திரம், சான்றிதழுடன் ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்படுகிறது.

அதன்படி, 2021-22-ம் ஆண்டுக்கான ‘வாழும் கைவினை பொக்கிஷம்’ விருதுகள் ஜி.மாரிமுத்து (தஞ்சை கலைத்தட்டு), என்.மாரியப்பன் (தஞ்சை ஒவியம்), ஜி.தங்கராஜூ (வீணை கைத்திற தொழில்), பொன்.விசுவநாதன் (பஞ்சலோக சிற்பம்), எம்.ராமலிங்கம் (காகிதக்கூழ் பொம்மை), எம்.முத்துசிவம் (கோவில் நகைகள்), வி.கமலம் (இயற்கை நார் பொருட்கள்), டி.விஜயவேலு (சுடுகளிமண் பொம்மைகள்), எஸ்.பிரணவம் ஸ்தபதி (பஞ்சலோக சிற்பம்), கே.வடிவேல் (கடல் சிப்பி பொருட்கள்) ஆகிய 10 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

‘பூம்புகார் மாநில விருது’

‘பூம்புகார் மாநில விருது’ தமிழகத்தின் சிறப்பான கைவினைஞர்களின் கைத்திற தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 10 கைவினைஞர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.12 லட்சம் மதிப்பில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையுடன், 4 கிராம் தங்கப்பதக்கம், தாமிரபத்திரம் மற்றும் தகுதிச்சான்றிதழும் கொண்டதாகும்.

அதன்படி, 2021-22-ம் ஆண்டுக்கான பூம்புகார் மாநில விருதுகளை டி.கதிரவன் (மரச்சிற்பம்), ஏ.தென்னரசு (தஞ்சை ஓவியம்), எஸ்.சகாயராஜ் (மரச்சிற்பம்), ஆர்.கோபு (பஞ்சலோக சிலை), எஸ்.யுவராஜ் (மரச்சிற்பம்), எஸ்.ராதா (நெட்டி வேலை), டி.நாகப்பன் (கற்சிற்பம்), டி.மகேஸ்வரி (காகிதக்கூழ் பொம்மைகள்), என்.ராஜேந்திரன் (வீணை கைத்திறத்தொழில்), டி.செல்லம்மை (இயற்கை நார் பொருட்கள்) ஆகிய 10 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

பொது பயன்பாட்டு மையங்கள்

மேலும், தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம் கலியனூர் (காகிதக்கூழ் பொம்மைகள்), நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் (மரவர்ண கடைசல்), பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் (மரச்சிற்பங்கள்), ஈரோடு மாவட்டம் ஆசனூர் (ஒன்னிக்குச்சி கைத்திறத் தொழில்), சேலம் மாவட்டம் தம்மம்பட்டி (மரச்சிற்பங்கள்), விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி (சுடுகளிமண் கைத்தொழில்), நெல்லை மாவட்டம் பத்தமடை (பத்தமடை பாய்) ஆகிய இடங்களில் கைவினைஞர்களின் நலனுக்காக ரூ.3 கோடியே 94 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 7 பொது பயன்பாட்டு மையங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்த பொது பயன்பாட்டு மையங்களில் கைவினை குழுமங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் ஒன்று கூடி, இங்கு பொருத்தப்பட்டுள்ள நவீன எந்திரங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தி, கைவினைப்பொருட்களை எளிதாகவும், விரைவாகவும் தயாரித்து, விற்பனை செய்து பயன்பெற்று கொள்ளலாம். மேலும், நலிந்த கைவினைத்தொழில்களான சுடுகளிமண் மற்றும் பத்தமடை பாய் போன்ற கைவினைத்தொழில் செய்யும் கைவினைஞர்களுக்கும் நவீன எந்திரங்களுடன் கூடிய பொது பயன்பாட்டு மையங்கள் விக்கிரவாண்டி மற்றும் பத்தமடையில் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் மூலம் சுமார் 5 ஆயிரம் கைவினைஞர்கள் பயன்பெறுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் இறையன்பு, முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் வி.ஷோபனா உள்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story