மத்திய அரசு எல்லாமே செய்ய வேண்டும் என்றால் நீங்கள் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்? அண்ணாமலை கடும் விமர்சனம்


மத்திய அரசு எல்லாமே செய்ய வேண்டும் என்றால் நீங்கள் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்? அண்ணாமலை கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 22 April 2022 6:59 PM GMT (Updated: 22 April 2022 6:59 PM GMT)

தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறை மின்வெட்டுத்துறையாக செயல்படுகிறது என்றும், எல்லாமே மத்திய அரசு செய்ய வேண்டும் என்றால் நீங்கள் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள் என்றும் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை,

எப்போதெல்லாம் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மலர்கிறதோ அப்போதெல்லாம் கடுமையான மின்வெட்டும் ஏற்படுவது ஏன்? மற்ற ஆட்சிகளில் மின்சார அமைச்சர், மின்சார துறை என்று இருப்பது வழக்கம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் மட்டும் மின்வெட்டுத் துறை அமைச்சராகவும், மின்வெட்டுத் துறையாகவும் செயல்படும் காரணம் என்ன?

தொடர்ந்து மின் வெட்டு. காரணம் கேட்டால், மத்திய மின் தொகுப்புதான் காரணம் என்று ஒரு கட்டுக்கதையை அமைச்சர் அவிழ்த்து விடுகிறார். மத்திய தொகுப்பில் நிலக்கரி பற்றாக்குறை என்று கூறுகிறார்.

நிலக்கரி உற்பத்தியில் சாதனை

சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இதுவரை இல்லாத அளவிற்கு 37 சதவீதத்திற்கும் கூடுதலாக நிலக்கரி உற்பத்தியில், நாம் சாதனை செய்து காட்டி இருக்கிறோம்.

இந்தியாவில் தற்போது 22 கோடி டன்கள் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. இந்தியாவில் பிற மாநிலங்களில் இல்லாத மின்வெட்டு தமிழகத்தில் மட்டும் வருவதற்கான காரணம் என்ன என்பதை மக்களும் ஊடகங்களும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

செயற்கை மின் தட்டுப்பாடு

தமிழ்நாட்டில் மின்சார வாரியம் என்பது லட்சக்கணக்கான கோடி நட்டத்தில் இயங்கினாலும், அது பொன் முட்டையிடும் வாத்தாக தமிழக ஆட்சியாளர்களுக்கு பயன்படுகிறது.

கடந்தாண்டு மட்டும் செயற்கை மின்வெட்டை உருவாக்கி அதன் மூலம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி 2 ஆயிரம் கோடி ரூபாய் தனியார் வசம் போயிருக்கிறது.

தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, மின்வெட்டை அமல்படுத்தி, அவசரம் என்ற குறிப்பு எழுதி, தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி, அதில் மிக அதிக அளவு கமிஷன் அடிப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, இதுபோன்ற, செயற்கையான மின்தட்டுப்பாடு தமிழக அரசால் உருவாக்கப்படுகிறது. அடுத்த மாதம் எல்லாம் மின்வெட்டு அதிகரிக்கும்.

தமிழக மக்கள் எல்லாம் ஒரு ஜெனரேட்டர் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இல்லை என்றால் வெளிச்சம் இல்லாமல் மின்விசிறி இல்லாமல் பிள்ளைகள் பரீட்சைக்கு படிக்க முடியாமல், குடும்பத் தலைவர்கள் பணிக்குச் செல்ல முடியாமல், குடும்பத்தலைவிகள் சமைக்க முடியாமல், நோயாளிகள் வயதானவர்கள் உறங்கவும் முடியாமல் துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலை.

மக்களை வாட்ட நினைக்காதீர்கள்

அனைத்து மாநிலங்களையும் சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி தமிழகத்திற்கு 3 ஆயிரத்து 275 மெகாவாட் இலக்கு நிர்ணயித்தது. ஆனால் தமிழகம் இதுவரை சாதித்தது வெறும் 325 மெகாவாட் மட்டுமே.

லாபம் சம்பாதிக்க முடியாது என்ற காரணத்திற்காக மத்திய அரசு பெரிய அளவில் மானியம் கொடுத்து உருவாக்கும் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யாமல் மாநில அரசு தள்ளிப்போடுகிறது.

எல்லாமே மத்திய அரசு செய்ய வேண்டும் என்றால் பிறகு நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கிறீர்கள்.

தனிப்பட்ட லாப நோக்கத்திற்காக வாக்களித்த மக்களை எல்லாம் மின்தடை ஏற்படுத்தி வாட்ட நினைக்காதீர்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story