தஞ்சை விபத்து: அதிமுக, பாஜக, திமுகவினர் அனைவரும் இணைந்து பணியாற்றினர் - அன்பில் மகேஷ் உருக்கம்


தஞ்சை விபத்து: அதிமுக, பாஜக, திமுகவினர் அனைவரும் இணைந்து பணியாற்றினர் - அன்பில் மகேஷ் உருக்கம்
x
தினத்தந்தி 28 April 2022 7:32 AM GMT (Updated: 28 April 2022 7:32 AM GMT)

தஞ்சை களிமேடு விபத்தின்போது அதிமுக, பாஜக, திமுகவினர் என அனைவரும் இணைந்து பணியாற்றினர் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராதவிதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

களிமேடு விபத்து குறித்து இன்று சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:-

களிமேடு பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், காலை 5 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்-அமைச்சர், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

நேரடியாக சட்டசபை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் அங்கு சென்றோம். கடந்த 11 மாதங்களாக பல பள்ளி நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல மாணவர்களுக்கு பதக்கங்கள், மாலைகள் சூட்டியிருக்கிறேன். ஆனால், அந்த பிணவறையில் நான் 8ஆம் வகுப்பு மாணவருக்கு மாலை வைத்தேன் என கண்கலங்கியபடி பேசினார்.

தொடர்ந்து, முதல்-அமைச்சரிடம் எல்லா உடல்களுக்கும் இங்கே மாலை அணிவித்து விடலாம் எனக் கூறினோம். ஆனால், அதை மறுத்த முதல்-அமைச்சர் அனைவரது வீடுகளுக்கும் நேரடியாக சென்று உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டும் எனக் கூறி அனைத்து வீடுகளுக்கும் நடந்தே சென்று நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அனைவரும் உதவி செய்தார்கள்.

விபத்து நடந்த பகுதியில் ஊராட்சித் தலைவர் அதிமுக-வை சார்ந்தவர், ஒன்றிய கவுன்சிலர் பாஜக-வை சார்ந்தவர், மாவட்ட கவுன்சிலர் திமுக-வை  சார்ந்தவர், இவர்கள் மூன்று பேரும் இணைந்து பணியாற்றினார்கள்.

முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் கூறும் நமது ஆட்சி என்பது களத்தில் பிரதிபலிக்கிறது. அதேபோல், பேரவையிலும் பிரதிபலிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Next Story