ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி: திருச்சி பிஷப்புக்கு வலைவீச்சு


ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி: திருச்சி பிஷப்புக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 April 2022 7:58 PM GMT (Updated: 28 April 2022 7:58 PM GMT)

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக 20 பேரிடம் ரூ.3 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவான திருச்சி பிஷப்பை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சி,

மதுரை கிரம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர், திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபை' (டி.இ.எல்.சி.) உறுப்பினராக இருந்து வருகிறார். ரமேஷ்குமார், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி டி.இ.எல்.சி. பிஷப் எச்.ஏ.மார்ட்டினை கடந்த 2009-ம் ஆண்டு சந்தித்தேன். அப்போது அவர், திருச்சபை சம்பந்தமாக ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு நடைபெற்று வருவதால் திருச்சபையின் இதர செலவினங்களுக்கு ரூ.1½ கோடி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றும், அதற்கு பிரதிபலனாக திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.

20 பேருக்கு ஆசிரியர் பணி

நானும் அதை நம்பி எனக்கு தெரிந்த 20 பேரிடம் வசூல் செய்து ரூ.1½ கோடியை பிஷப் மார்ட்டினிடம் அவரது அலுவலகத்தில் வைத்து கொடுத்தேன். அப்போது பிஷப் மார்ட்டினின் மனைவி ஜீவஜோதி, சகோதரர் ஹென்றி ராஜசேகர் ஆகியோரும் ஆசிரியர் பணி தொடர்பாக உறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி ஆசிரியர் பணி நியமனம் பெற்றுத்தரவில்லை.இதைத்தொடர்ந்து 2013-ம் ஆண்டு பிஷப் மேலும் ரூ.1½ கோடி தேவைப்படுகிறது என்றார். நானும் அதை நம்பி 2017-ம் ஆண்டு ஏப்ரல் 22-ந் தேதி முதல் ஜூலை மாதம் 27-ந் தேதி வரை மேலும் ரூ.1½ கோடியை பெற்றுக்கொடுத்தேன்.

ரூ.3 கோடி மோசடி

ஆனால் அவர்கள் உறுதி அளித்தபடி ஆசிரியர் பணி பெற்றுத்தராமல் ஏமாற்றி ரூ.3 கோடியை மோசடி செய்துவிட்டனர். எனவே பிஷப் மார்ட்டின், ஜீவஜோதி, ஹென்றி ராஜசேகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து ரூ.3 கோடியை பெற்றுத்தர வேண்டும்.

இவவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். விசாரணையில், ரூ.3 கோடி மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து பிஷப் மார்ட்டின், ஜீவஜோதி, ஹென்றி ராஜசேகர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story