கள்ளக்குறிச்சி: சொத்து தகராறில் அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி உள்ளிட்ட 4 பேர் கைது..!


சந்திரசேகர், ஆட்டுக்காரன், சஞ்சய், செல்லம்மாள் மற்றும் கொலை செய்யப்பட்ட சக்கரவர்த்தி
x
சந்திரசேகர், ஆட்டுக்காரன், சஞ்சய், செல்லம்மாள் மற்றும் கொலை செய்யப்பட்ட சக்கரவர்த்தி
தினத்தந்தி 29 April 2022 12:10 PM GMT (Updated: 29 April 2022 12:10 PM GMT)

திருக்கோவிலூர் அருகே சொத்து தகராறில் அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலூரை அடுத்த ஜம்படை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன் மகன் சக்கரவர்த்தி (வயது 47). இவரது தம்பி சந்திரசேகர் (45) ஆவார். இவர்கள் 2 பேருக்கும் இடையே நிலம் மற்றும் சொத்து தகராறு காரணமாக பிரச்சினை இருந்து வந்தது. 

இந்நிலையில் இருவருக்கும் பொதுவான நிலத்திலுள்ள மரத்தை சக்கரவர்த்தி வெட்டி இருக்கிறார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகர், உறவினர் ஆட்டுக்காரன், மகன் சஞ்சய், மருமகள் ஜெயந்தி, மனைவி இந்திரா, உறவினர்கள் செல்லம்மாள் மற்றும் ரகுமதி ஆகிய ஏழு பேரும் ஒன்று சேர்ந்து தடி மற்றும் இரும்பு கம்பிகளால் சக்கரவர்த்தியின் தலையில் பலமாக தாக்கியிருக்கின்றனர். 

இதில் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சக்கரவர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். 

இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று இறந்துபோன சக்கரவர்த்தியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின் உடலை உரியவரிடம் ஒப்படைத்தனர். 

மேலும் சக்கரவர்த்தி கொலை செய்த வழக்கில் அவரது தம்பி சந்திரசேகர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்திரசேகர், ஆட்டுக்காரன், ஆட்டுக்காரன் மனைவி செல்லம்மாள் மற்றும் சந்திரசேகர் மகன் சஞ்சய் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் ஜெயந்தி, இந்திரா மற்றும் ரகுமதி ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story