ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.4¾ லட்சம் துணிகர கொள்ளை


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.4¾ லட்சம் துணிகர கொள்ளை
x
தினத்தந்தி 5 May 2022 11:07 PM GMT (Updated: 5 May 2022 11:07 PM GMT)

கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்கோவில் மேடு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள தனியார் வணிக வளாக கட்டிடத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. அதே பகுதியை சேர்ந்த முதியவர் கணேசன் என்பவர் காலை மற்றும் மாலையில் ஏ.டி.எம். மையத்தை சுத்தம் செய்து பராமரிக்கும் பணியை செய்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் கணேசன் வழக்கம்போல் ஏ.டி.எம். மையத்தை சுத்தம் செய்ய சென்றார். அப்போது ஏ.டி.எம். மையத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து கணேசன் அங்கிருந்த முருகேசன் என்பவரின் உதவியோடு ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை திறந்து பார்த்தார். அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரம் கியாஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை போயிருந்தது. மேலும் ஏ.டி.எம். மையம் முழுவதும் புகை மூட்டமாக காட்சி‌ அளித்தது.

ரூ.4.90 லட்சம் கொள்ளை

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணேசன், பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ரோந்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரம் வெட்டி உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்து 900 கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் மையத்தின் நுழைவுவாயிலில் இருந்த எச்சரிக்கை ஒலிப்பானின் வயரை துண்டித்துவிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பதும் தெரிந்தது. அதேபோல் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கப்பட்டு இருந்த தட்டுகளை தூக்கி சென்ற மர்மநபர்கள், அதை அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சாலையோரம் வீசி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

6 தனிப்படைகள்

அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் சீமா வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வணிக வளாக கட்டிடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை 6 தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story