வங்கியில் ரூ.30 கோடி பெற்று நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்போம்


வங்கியில் ரூ.30 கோடி பெற்று நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்போம்
x
தினத்தந்தி 9 May 2022 12:09 AM GMT (Updated: 9 May 2022 12:09 AM GMT)

வங்கியில் ரூ.30 கோடி கடன் பெற்று நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்போம் என்று நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் நடிகர் சங்க பொதுக்குழு முடிந்ததும் கூட்டாக தெரிவித்தனர்.

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன், ராஜேஷ், சிபி, மனோபாலா, குஷ்பு, ராதிகா சரத்குமார், சவுகார் ஜானகி, லதா, சச்சு, கோவை சரளா மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொதுக்குழுவை வாழ்த்தி ரஜினிகாந்த் அனுப்பிய ஆடியோவில், ‘ரொம்ப நாட்களுக்கு முன்பாக பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று முதன் முதலில் பொதுக்குழுவை கூட்டி உள்ள பாண்டவர் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய எனக்கு பாராட்டி விருது வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கிறேன். பாண்டவர் அணியினர் நடிகர் சங்கத்துக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று கனவு கண்டு இருக்கிறீர்களோ அவையெல்லாம் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்' என்று பேசி இருந்தார்.

தீர்மானங்கள்

பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

‘வங்கியில் கடன் பெற்று நடிகர் சங்க கட்டிட பணிகளை நிறைவு செய்வதற்கு பொதுக்குழு ஒப்புதல் பெறப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் கிராமத்தில் நடிகர் சங்கம் பெயரில் வாங்கப்பட்ட விவசாய நிலம் அப்போதைய பொதுச்செயலாளர் ராதாரவியால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மீண்டும் தொடர்ந்து நடத்தவும், அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் தொடர்ந்து நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள் என்பதையும் பொதுக்குழுவுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர்கள் ராதாரவி, சரத்குமார் ஆகியோர் மீதான வழக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதி பெற உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் இதர வழக்குகள் தொடர பொதுக்குழு ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.

இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

சவுகார் ஜானகி

பொதுக்குழுவில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பத்மஶ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகி, மூத்த நடிகைகள் ராதிகா, பாரதி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

பின்னர் கூட்டாக பேட்டி அளித்த நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் கூறும்போது, ‘நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க இன்னும் ரூ.30 கோடி வேண்டும். அந்த நிதியை எப்படித் திரட்டுவது என்று ஆலோசித்தோம். வங்கியில் கடன் பெற பொதுக்குழுவில் அனுமதி வாங்கி இருக்கிறோம். விரைவில் கட்டிடத்தைக் கட்டி முடிக்க நடவடிக்கை எடுப்போம். உள்அலங்காரத்தோடு சேர்த்து இன்னும் 40 சதவீத பணிகள் பாக்கி உள்ளன. நடிகர் சங்க கட்டிடப் பணிக்காக நடிகர்களிடமும் நிதி கேட்போம். கட்டிடம் கட்டி முடித்தபிறகு அதில் வரும் வருவாயில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவ உதவிகள் வழங்குவோம். நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் அடையாளமாக இருக்கும்' என்றனர்.

Next Story