கோவை: அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் ஊழியர்கள் - 3 பேர் கைது


கோவை: அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் ஊழியர்கள் - 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 3:17 AM GMT (Updated: 11 May 2022 3:17 AM GMT)

கோவை காந்திபுரம் பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து அரசு பஸ் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை:

கோவையை அடுத்த வெள்ளமடையில் இருந்து காந்திபுரம் டவுன் பஸ்நிலையம் நோக்கி நேற்று மாலை 3 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அதை டிரைவர் சந்தோஷ் என்பவர் ஓட்டினார். கண்டக்டர்களாக ரஞ்சித், வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர்.

அப்போது தனியார் பஸ்சுக்கு முன்பு காந்திபுரம்- சேரன் மாநகர் செல்லும் (தடம் எண் 3 எச்) அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அரசு பஸ்சை டிரைவர் கார்த்திகேயன் ஓட்டினார். அவர், பின்னால் வந்த தனியார் பஸ்சுக்கு வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனியார் பஸ் டிரைவர் ஆத்திரம் அடைந்தார்.

பின்னர் மாலை 3.15 மணி அளவில் அந்த தனியார் மற்றும் அரசு பஸ்கள் காந்திபுரம் டவுன் பஸ்நிலையத்துக்குள் வந்தன. அப்போது தனியார் பஸ் டிரைவர் சந்தோஷ், கண்டக் டர்கள் ரஞ்சித், வெங்கடேஷ் ஆகியோர் சேர்ந்து அரசு பஸ் டிரைவர் கார்த்திகேயனை கையால் சரமாரியாக தாக்கினர். இதில் கார்த்திகேயன் படுகாயம் அடைந்தார்.

இது குறித்த தகவல் பரவியதும் மற்ற அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் காந்திபுரம் பஸ்நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே சாலையோரம் 25-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை ஆங்காங்கியே நிறுத்திவிட்டு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் கோவை கோட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டம் காரணமாக 2 மணி நேரம் பஸ் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

இது குறித்து அரசு பஸ் டிரைவர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் தனியார் பஸ் டிரைவர் சந்தோஷ், கண்டக்டர்கள் ரஞ்சித், வெங்கடேஷ் ஆகிய 3 பேர் மீது மிரட்டல், தாக்குதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் ஆகிய 4 பிரிவுக ளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Next Story