ஆலங்குடி அருகே சொத்து பிரச்சினையில் விவசாயி அடித்துக்கொலை தம்பதிகள் கைது


ஆலங்குடி அருகே  சொத்து பிரச்சினையில் விவசாயி அடித்துக்கொலை தம்பதிகள் கைது
x
தினத்தந்தி 12 May 2022 5:29 PM GMT (Updated: 12 May 2022 5:29 PM GMT)

ஆலங்குடி அருகே சொத்து பிரச்சினையில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து தம்பதிகளை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குடி:
விவசாயி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மூக்கம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் என்கிற குருணாஸ் (வயது 47). விவசாயி. இவருக்கும் இவரது உறவினர்களான பார்த்தசாரதி (39), திருநாவுக்கரசு ஆகியோருக்கும் இடையே பல ஆண்டுகளாக சொத்து பிரச்சினை இருந்து வந்தது. 
இதனால் அடிக்கடி அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு பிடாரி அம்மன் கோவில் திருவிழாவிற்கு குமரேசன் மகன் சுரேஷ் என்பவர் சென்று விட்டு முக்கம்பட்டி கடை தெருவிற்கு வந்துள்ளார். 
அடித்துக்கொலை 
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பார்த்தசாரதி, திருநாவுக்கரசு மற்றும் இவர்களது மனைவிகளான சசிகலா (37), லெட்சுமி (32) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சுரேசை தாக்க முயன்றனர். இதையறிந்த குமரேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார். இதையடுத்து 4 பேரும் சேர்ந்து குமரேசனை கீழே தள்ளி விட்டு கழுத்தில் மிதித்து அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த குமரேசன் மயங்கினார்.  
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குமரேசனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குமரேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 
இதுகுறித்து தகவல் அறிந்த சம்பட்டிவிடுதி போலீசார், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை, சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  
சாலை மறியல் 
இதையடுத்து குமரேசனின் உறவினர்கள் கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மூக்கம்பட்டி கடைத்தெரு அருகே கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சம்பட்டிவிடுதி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தையில் போலீசார் கொலை செய்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதுகுறித்து சம்பட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று பார்த்தசாரதி, திருநாவுக்கரசு மற்றும் அவர்களது மனைவிகளான சசிகலா, லெட்சுமி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். சொத்து பிரச்சினையில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story