தனியார் ஆலை மேலாளர் வீட்டில் 23 பவுன் நகைகள் திருட்டு


தனியார் ஆலை மேலாளர் வீட்டில் 23 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 28 Sep 2022 7:00 PM GMT (Updated: 28 Sep 2022 7:00 PM GMT)

பழனியில் தனியார் ஆலை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்


திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜிநகரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 55). இவர் சாமிநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மாட்டுத்தீவனம் தயாரிக்கும் ஆலையில் மேலாளராக உள்ளார். இவருடைய மனைவி ரஞ்சனி (48). இவர்களுக்கு சீத்தாலட்சுமி (24) என்ற மகளும், கிருஷ்ணா (21) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் தசரா திருவிழாவுக்காக ரங்கநாதன் தனது குடும்பத்தினருடன் கடந்த 25-ந்தேதி மைசூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றார்.

திருவிழா கொண்டாட்டம் முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர்கள் பழனிக்கு திரும்பினர். பின்னர் வீட்டின் நுழைவு வாயில் கதவில் இருந்த பூட்டை திறந்து உள்ளே சென்ற ரங்கநாதன், வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று அவர் பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 23 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

பக்கத்து வீட்டினருக்கு தெரியவில்லை

பின்னர் பழனி டவுன் போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி, இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது நுழைவு வாயில் கதவில் இருந்த பூட்டை உடைக்காமல் கதவில் ஏறி தாவிக்குதித்த மர்ம நபர்கள் வீட்டின் கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர் என்பதும், நுழைவு வாயில் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் திருட்டு சம்பவம் எப்போது நடந்தது என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

பீரோவை உடைக்கவில்லை

அதேபோல் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைக்காமல் அதன் சாவி எங்காவது இருக்கிறதா? என்று தேடி பார்த்தனர். அப்போது பீரோவின் மேல்பகுதியில் சாவி இருப்பதை பார்த்தனர். தங்களுக்காகவே வீட்டின் உரிமையாளர் சாவியை விட்டுச்சென்றதாக நினைத்து மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பீரோவை உடைக்காமல் அந்த சாவியை கொண்டே திறந்து பீரோவில் இருந்த நகைகளை திருடிச்சென்றனர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது வீட்டுக்குள் மோப்பம்பிடித்துவிட்டு சாலையில் இறங்கி ஓடியது. பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி வரை சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

வலைவீச்சு

அதையடுத்து கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடரும் திருட்டு, கொள்ளை சம்பவங்கள்


பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் அ.கலையம்புத்தூர் பகுதிகளில் உள்ள 2 வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வீடுகளில் இருந்தவர்களை கத்தி முனையில் மிரட்டி 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர்.

அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பழனி நகரில் அரங்கேறியுள்ள திருட்டு சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


Next Story