இலங்கை சிறையில் இருந்து விடுதலையான புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்கள் சென்னை வந்தனா்


இலங்கை சிறையில் இருந்து விடுதலையான புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்கள் சென்னை வந்தனா்
x

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்கள் சென்னை வந்தனர்.

செங்கல்பட்டு

புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 24 மீனவர்கள், 5 படகுகளில் கடந்த மாதம் 28-ந் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். திடீரென அவர்களது விசைப்படகில் பழுது ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை போலீசார், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 24 பேரையும் கைது செய்தனா்.

படகுகளுடன் அவர்களை இலங்கைக்கு கொண்டு சென்று கோர்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்களையும் இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது. அனைவரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் 24 மீனவா்களுக்கும் அவசர கால சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த தமிழக மீனவர்களை பா.ஜ.க. சார்பில் மாநில மீனவரணி தலைவர் நீலாங்கரை முனுசாமி மற்றும் அக்கட்சியினர் சால்வை அணிவித்து, உணவு பொருட்கள் கொடுத்து வரவேற்றனர். பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், 24 மீனவர்களையும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர்.


Next Story