2,500 டன் கறிக்கோழி விற்பனை


2,500 டன் கறிக்கோழி விற்பனை
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் 2.500 டன் கறிக்கோழி விற்பனையானதாக சங்க நிர்வாகி கூறினார்.

நாமக்கல்

விற்பனை அதிகரிப்பு

தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு தினசரி 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில் தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு, நுகர்வு அதிகரிக்கும் போது அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி ஒரு கிலோ ரூ.88-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி, படிப்படியாக உயர்ந்து, தற்போது ரூ.119-ஐ எட்டி உள்ளது. இதற்கிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டை விட அதிக அளவில் கறிக்கோழி விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

ரூ.60 கோடி இழப்பு

இது குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவரும், கறிக்கோழி உற்பத்தியாளருமான வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

கறிக்கோழியை பொறுத்தவரை ஒரு கிலோ உற்பத்தி செய்ய ரூ.95 செலவாகிறது. தற்போது கொள்முதல் விலை, ரூ.119 என நிர்ணயம் செய்து இருந்தாலும், வியாபாரிகள் குறைவான விலைக்கு தான் கோழிகளை பிடிக்கின்றனர். அதனால் ஒரு கிலோவுக்கு ரூ.25 வரை இழப்பு ஏற்படுகிறது.

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் 2,500 டன் கறிக்கோழி விற்பனையானது. இது, கடந்த ஆண்டைவிட 50 லட்சம் கிலோ அதிகம். இருப்பினும் இந்த விற்பனையின் மூலம், ஒரு கிலோவுக்கு ரூ.25 வீதம் 2 நாட்களில் பண்ணையாளர்களுக்கு ரூ.60 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயம் செய்யும் கொள்முதல் விலைக்கே, வியாபாரிகள் கோழிகளை பிடித்தால், பண்ணையாளர்களுக்கு லாபம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story