தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 270 வழக்குகள் முடித்து வைப்பு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 270 வழக்குகள் முடித்து வைப்பு
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 270 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 270 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மதுசுதனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

சிறப்பு சார்பு நீதிபதி ஜெகன்நாதன் வரவேற்றார். இதில் அனைத்து நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்ட உரிமையாளர்களுக்கு இழப்பீடு சார்ந்த வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், வங்கியில் விவசாய கடன் மற்றும் கல்வி கடன் பெற்ற வாராக் கடன் வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது.

270 வழக்குகள் முடித்து வைப்பு

மாவட்ட முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 1 ஆயிரத்து 850 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 270 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.3 கோடியே 26 லட்சத்து 58 ஆயிரத்து 401 சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் செய்திருந்தனர். முடிவில் சட்ட ஆலோசனை உதவி வழக்கறிஞர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.


Next Story