அரியலூரில் 2-வது நாளாக மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்


அரியலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது.

அரியலூர்

தடகள போட்டி

குடியரசு தின விழாவையொட்டி பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரியலூர் மாவட்ட அளவிலான 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், கோலூன்றி தாண்டுதல், உயரம் தாண்டுதல், தூரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன. இந்த போட்டிகளில் குறுவட்ட அளவில் நடத்தப்பட்ட தடகள போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பரிசுகள்

போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியினர் செய்திருந்தனர்.

இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயா (இடைநிலை), சுவாமி முத்தழகன் (தொடக்கக் கல்வி), அரியலூர் ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story