வடக்குப்பட்டு கிராமத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நிறைவு


வடக்குப்பட்டு கிராமத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நிறைவு
x
தினத்தந்தி 29 Sep 2023 9:47 AM GMT (Updated: 29 Sep 2023 10:51 AM GMT)

வடக்குப்பட்டு கிராமத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்சி பணி நிறைவு பெற்றது. அங்கு இருந்து அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

காஞ்சிபுரம்

அகழ்வாராய்ச்சி பணி

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி சென்னை வட்டார தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டதில் அரியவகை பொருட்களான கண்ணாடி மணிகள், வட்ட சில்லுகள், இரும்பால் ஆன இடுபொருட்கள் மூத்திரை சீல், 2 தங்க அணிகலன்கள் உள்ளிட்டவை கிடைத்தது.

2-ம் கட்ட பணி நிறைவு

இந்த நிலையில் கடந்த மே மாதம் 19-ந்தேதி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த அகழ்வாய்வில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் வரலாற்று தொடக்க கால மக்கள் பயன்படுத்திய கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சுடுமண் பொம்மைகள், சூதுபவள மாணிகள், இரும்பு மற்றும் செம்புப் பொருட்கள், தங்க ஆபரணங்கள், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், தமிழ் பிராமி எழுத்துபொறிப்புடன் கூடிய பானை ஓடுகள் போன்றவை இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக மூன்று எழுத்துப்பொறிப்புகளுடன் கூடிய பானை ஓடுகள் மிகவும் முக்கிய கண்டுபிடிப்பாகும். இந்த பானை ஓடு ஒன்றில் "மத்தி" என்று 3 எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும் "த" மற்றும் "ரெஸ" என்ற 2 ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

ஆய்வறிக்கை தயாரிப்பு பணி

இது குறித்து தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து கூறியதாவது:-

இதுவரை வட தமிழகத்தில் காஞ்சீபுரம், பட்டரைப்பெரும்புதூர் போன்ற இடங்களில் மட்டுமே தமிழ்-பிராமி எழுத்துப்பொறிப்புகள் உள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ளன. வடக்குபட்டில் எழுத்துப்பொறிப்புடன் கூடிய பானை ஓடு கிடைத்திருப்பது மிகவும் முக்கிய கண்டுபிடிப்பு. இதன் காலம் கி.மு முதலாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

மேலும் பல்லவர் மற்றும் சோழர்கள் கால காசுகளும் கண்டறியப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் அனைத்தும் சென்னையில் உள்ள தொல்லியல் அலுவலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அகழாய்விற்கான ஆய்வறிக்கை தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story