ஓசூர் அருகே பட்டாசு குடோனில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது வெடி விபத்து - 3 பேர் படுகாயம்


ஓசூர் அருகே பட்டாசு குடோனில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது வெடி விபத்து - 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 Aug 2023 10:29 AM GMT (Updated: 8 Aug 2023 11:40 AM GMT)

அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பட்டாசு குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டையில் கடந்த 29-ந்தேதி பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகள், குடோன்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நிலவரித் திட்ட சிறப்பு டி.ஆர்.ஓ. பாலாஜி தலைமையில் ஓசூர் அருகே உள்ள ஜே.காரப்பள்ளி பகுதியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு குடோனில் இன்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிறப்பு டி.ஆர்.ஓ. பாலாஜி, நிலவரித் திட்ட சிறப்பு தாசில்தார் முத்துப்பாண்டி, பட்டாசு குடோனின் மேலாளர் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் குடோனின் மேலாளருக்கு 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் சிறப்பு டி.ஆர்.ஓ. பாலாஜிக்கு 20 சதவீத தீக்காயமும், சிறப்பு தாசில்தார் முத்துப்பாண்டிக்கு வலது கையில் லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். சிறப்பு டி.ஆர்.ஓ. பாலாஜி மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story