பால் லாரி - கார் நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி


பால் லாரி - கார் நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
x

செங்கம் அருகே பால் லாரி - கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் - மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கம் அருகே பால் லாரி - கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் - மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

லாரி - கார் மோதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வந்தாராவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன் (வயது 65).

இவரது மனைவி அவரஞ்சி (60), மகன் பழனி (39) மற்றும் உறவினர்கள் தங்கவேலு, மகாலிங்கம் ஆகிய 5 பேரும் திருக்கோவிலூர் பகுதிக்கு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து அனைவரும் காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தண்டராம்பட்டு அருகே கார் வந்து கொண்டிந்தது.

அப்போது பெங்களூருவில் இருந்து தண்டராம்பட்டு நோக்கி வந்த பால் லாரியும் இவர்கள் வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

3 ேபர் பலி

இந்த விபத்தில் காரில் இருந்த சின்னபையன், அவரது மனைவி அவரஞ்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த மகன் பழனி, தங்கவேலு, மகாலிங்கம் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனி பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற 2 பேரும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இறந்த சின்னபையன், அவரஞ்சி ஆகியோரின் உடல் செங்கம் அரசு மருத்துவமனையிலும், பழனியின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து மேல்செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story