தூத்துக்குடியில்ஆடு திருடிய 3 பேர் கைது


தூத்துக்குடியில்ஆடு திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:47 PM GMT)

தூத்துக்குடியில்ஆடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து எட்டு ஆடுகள் மீட்கப்பட்டன.

தூத்துக்குடி

தூத்துக்குடி திரவியபுரத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் விஜயசேகர் (வயது 33). இவர், வீட்டின் தொழுவத்தில் கட்டி வைத்திருந்த ஆடுகளில் 8 ஆடுகள் காணாமல் போனது.

அதேபோன்று தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்த அழகு பெருமாள்சாமி மனைவி வீரலட்சுமி (37) என்பவரது 2 ஆடுகள் காணாமல் போய் உள்ளது.

இதுகுறித்து விஜயசேகர், வீரலட்சுமி ஆகியோர் தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த பாண்டியராஜ் மகன் பாஸ்கர் (24), தூத்துக்குடி ரகுமத் நகரை சேர்ந்த ராமநாதன் மகன் கோவிந்தராஜன் என்ற கோபி (21), தூத்துக்குடி செல்வநாயகபுரத்தை சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து (21) ஆகியோர் ஆடுகளை திருடியது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் பாஸ்கர், கோவிந்தராஜன் என்ற கோபி மற்றும் மாரிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த திருடப்பட்ட ரூ.96 ஆயிரம் மதிப்புள்ள 10 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story