தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கில் 3 பேர் கைது


தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2023 9:00 PM GMT (Updated: 14 Oct 2023 9:00 PM GMT)

பழனி அருகே, தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

பழனி அருகே, தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளி அடித்து கொலை

பழனி அருகே உள்ள மானூர் அண்ணாநகரை சேர்ந்தவர் காளிமுத்து. அவருடைய மகன் சிவக்குமார் (வயது 20). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், மானூர் சண்முகநதி ஆற்றுப்பாலத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பழனியை அடுத்த அ.கலையம்புத்தூரை சேர்ந்த அருண் (22), சிவா (23), விக்ரம் (23) மற்றும் அருணின் நண்பர்கள் சிலர் சிவக்குமாரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அருண் உள்பட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

செல்போன் பறித்ததில் தகராறு

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அருணிடம், சிவக்குமார் செல்போன் பறித்ததால் அருண் மற்றும் அவருடைய நண்பர்கள் சிவக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த வாரம் அருண், தனது மோட்டார் சைக்கிளில் மானூரில் இருந்து தனது ஊருக்கு வந்து கொண்டிருந்தார். பெத்தநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது, சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அருணை வழிமறித்து, அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர்.

பின்னர் ஊருக்கு வந்த அருண் தனது நண்பர்களான சிவா, விக்ரம் உள்ளிட்டோரிடம் தெரிவித்தார். அதையடுத்து செல்போன் பறித்தது யார்? என அருண் தனது நண்பர்களுடன் மானூர், பெத்தநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் வந்து தேடி பார்த்தனர்.

வலைவீச்சு

இந்நிலையில் கடந்த 12-ந்தேதி மாலையில் சிவக்குமார், மானூர் சண்முகநதி ஆற்றுப்பால பகுதியில் நின்று கொண்டிருந்தார். அதைக்கண்ட அருண், சிவா, விக்ரம் மற்றும் அவரது நண்பர்கள் சென்று சிவக்குமாரிடம்செல்போன் பறித்தது குறித்து கேட்டனர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதையடுத்து அருண் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிவக்குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் சிவக்குமார் மயங்கியதால் அவரை அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். ஆனால் தாக்குதலில் காயம் அடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story