கோவையில் 120 போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது

கோவையில் 120 போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
கோவை பெரிய கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப்- இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடிக்க முயன்றனர். இதில் 3 பேரை போலீசார் பிடித்துவிட்டனர். ஒருவர் மட்டும் தப்பியோடிவிட்டார். தொடர்ந்து அவர்களை சோதனை செய்தபோது 120 போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் உக்கடம் லாரிபேட்டை சேர்ந்த முகமதுபாருக் (வயது 35), தெற்கு உக்கடம் அவுசிங் யூனிட் புல்லுக்காட்டை சேர்ந்த பாலமுருகன் (22), சாரமேடு கரும்புக்கடை வள்ளல் நகரை சேர்ந்த அனிஸ் ரகுமான் (23) என்பதும், இவர்கள் பெங்களுரூவில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து அந்த பகுதியில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டை சேர்ந்த முகமத் தாரிக் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.