ஜாமீனில் வந்தவர் படுகொலை வழக்கில் 3 பேர் மதுரை கோர்ட்டில் சரண்


சோழவந்தான் அருகே ஜாமீனில் வந்தவர் படுகொலை வழக்கில் 3 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளனர்.

மதுரை

சோழவந்தான்,


சோழவந்தான் அருகே ஜாமீனில் வந்தவர் படுகொலை வழக்கில் 3 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளனர்.

ஜாமீனில் வந்தவர் படுகொலை

திருமங்கலத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 37). இவர் மீது 4 கொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமந்தன்ராயன்கோட்டையில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக சக்திவேல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.

இதை தொடர்ந்து சக்திவேல், மதுரை மத்திய சிறையில் இருந்து நேற்று முன்தினம் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளில் மேலகால் வழியாக திருமங்கலத்துக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மேலகால் அருகே கணவாய் கருப்புக்கோவில் பக்கம் அவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த அவரை காரில் வந்த மர்ம கும்பல் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் காரில் தப்பி சென்றனர்.

இது குறித்து சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், காடுபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

3 பேர் சரண்

இந்த நிலையில் நேற்று இந்த கொைல தொடர்பாக திருமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் பாபு (28), சுகுமார்(29), ஆனையூர் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் குமார்(28) ஆகிய 3 பேரும் மதுரை ஜே.எம். 6-வது கோர்ட்டில் சரண் அடைந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு ரமேஷ்பாபுவின் உறவினரான திருமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை சக்திவேல் கொலை செய்ததாகவும் இதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக சக்திவேலை கொலை செய்ததாக சரண் அடைந்த 3 பேரும் போலீசில் தெரிவித்து உள்ளனர்.


Related Tags :
Next Story