திருக்கோவிலூர் அருகே அய்யனார் கோவிலில் திருடிய கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது


திருக்கோவிலூர் அருகே அய்யனார் கோவிலில் திருடிய கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2023 6:45 PM GMT (Updated: 28 Jun 2023 8:21 AM GMT)

திருக்கோவிலூர் அருகே அய்யனார் கோவிலில் திருடிய கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

கோவிலில் திருட்டு

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் போலீசார் நேற்று வீரசோழபுரம் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். அந்த சமயத்தில் 4 பேரில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மற்ற 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் ஆற்காடு கிராமத்தை சேர்ந்த தவமணி மகன் பார்த்தசாரதி என்கிற கோபிநாத் (வயது 21), வீரசோழபுரம் நடுத்தெருவை சேர்ந்த வீரன் மகன் மூவேந்தர் என்கிற பேபி (23), மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் என்பதும், வி.புத்தூர் குளக்கரை அய்யனார் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பித்தளை பொருட்கள் மற்றும் பரனூர் கிராமத்தில் தாமிர கம்பிகளை திருடியதும் தெரியவந்தது.

17 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது

இதையடுத்து போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து கோவிலில் திருடப்பட்ட பித்தளை மணி, சொம்பு உள்ளிட்ட பித்தளை பொருட்கள் மற்றும் 35 கிலோ எடையிலான தாமிர கம்பிகளை மீட்டனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான கோபிநாத் அரகண்டலூரில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் திருட்டு வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story