கோஷ்டி மோதலில் 3 பேருக்கு கத்திக்குத்து

குனியமுத்தூர் அருகே கோஷ்டி மோதலில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
போத்தனூர்
குனியமுத்தூர் அருகே கோஷ்டி மோதலில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முன்விரோதம்
கோவை சுண்டாக்காமுத்தூரை சேர்ந்தவர் சசி (வயது33). தனியார் நிறுவன ஊழியர். இவரை மிரட்டி குனியமுத்தூரை சேர்ந்த பூவேந்தி ரன் என்பவர் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்த தாகவும், அதை திருப்பி கொடுக்க ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.
இதையடுத்து சசி தனது நண்பர் மாரிமுத்துவிடம் (35) ரூ.10 ஆயிரம் வாங்கி பூவேந்திரனிடம் கொடுத்து உள்ளார். ஆனால் அதன்பிறகும் அவர், மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப தர வில்லை என்று தெரிகிறது. இதனால் அவர்கள் இடையே முன் விரோதம் ஏற்பட்டது.
கத்திக்குத்து
இந்த நிலையில், மாரிமுத்து, தனது நண்பர்களான குனியமுத்தூர் ஆதி சக்தி நகரை சேர்ந்த சேகர் (31), திருநகரை சேர்ந்த சுஜித் (33) ஆகியோருடன் குனியமுத்தூர் சிறுவாணி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அங்கு பூவேந்திரன், தனது நண்பர்கள் 3 பேருடன் வந்தார். அப்போது மாரிமுத்து மற்றும் பூவேந்திரன் தரப்புக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பூவேந்திரன் உள்பட 4 பேர் சேர்ந்து மாரிமுத்துவை தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் சரமாரியாக குத்தினர்.
4 பேர் மீது வழக்கு
இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்துவை சேகர், சுஜித் ஆகியோர் தடுத்து காப்பாற்ற முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் சேகர் மற்றும் சுஜித்தையும் கத்தியால் குத்தியது. பின்னர் அவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றனர். கத்திக்குத்தில் மாரிமுத்து, சேகர், சுஜித் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் பூவேந்திரன் உள்பட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.






