மண்ணுளி பாம்பு விற்பனைக்கு புரோக்கர்களாக செயல்பட்ட 3 பேர் கைது


மண்ணுளி பாம்பு விற்பனைக்கு புரோக்கர்களாக செயல்பட்ட 3 பேர் கைது
x

களக்காட்டில் மண்ணுளி பாம்பு விற்பனைக்கு புரோக்கர்களாக செயல்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், களக்காடு வனச்சரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெபக்குமார் மற்றும் வனத்துறையினர் சத்திரம் கள்ளிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்தனர். 4 பேர் தப்பி ஓடி விட்டனர். விசாரணையில் பிடிபட்டவர்கள், கல்லடி சிதம்பரபுரம் நடுவூரை சேர்ந்த ஐகோர்ட் ராஜா மகன் சரவணன் (வயது 31), அதே ஊர் வடக்குத்தெருவை சேர்ந்த மிக்கேல் மகன் தேவதாசன் (32), சத்திரம் கள்ளிகுளத்தை சேர்ந்த சித்திரைபாண்டி (32) ஆகியோர் என்பதும், தப்பி ஓடியவர்கள் உவரியை சேர்ந்த மனோஜ் (40), குட்டுவன்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜா (27), கீழச்சாலைப்புதூரை சேர்ந்த திருமலைநம்பி மகன் சிவா (25), தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த அப்பாஸ் (45) என்பதும் தெரியவந்தது.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் 7 பேரும் மண்ணுளி பாம்பு, அம்பர்கிரீஸ் (திமிங்கலத்தின் உமிழ்நீர்) விற்பனை செய்யும் கும்பலுக்கு புரோக்கர்களாக செயல்பட்டதும், அந்த கும்பல் அனுப்பும் மண்ணுளி பாம்பு, அம்பர்கிரீஸ் படங்களை பலருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்து, 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரையும், அவர்களுடன் தொடர்புடைய கும்பலையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story