ஐஸ்பெட்டியில் வைத்து 660 மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது


ஐஸ்பெட்டியில் வைத்து 660 மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:45 PM GMT)

நாகூர் அருகே ஐஸ்பெட்டியில் மறைத்து வைத்து 660 மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் அருகே ஐஸ்பெட்டியில் மறைத்து வைத்து 660 மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுத்தலின்படி, மதுபாட்டில்கள் மற்றும் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிற்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் உத்தரவின்பேரில் தனிப்படை பிரிவு போலீசார் நாகூர் வெட்டாறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஐஸ்பெட்டியில் வைத்து கடத்தல்

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ மற்றும் அதை தொடர்ந்து வந்த ஸ்கூட்டர் ஆகியவற்றை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் இரண்டு வாகனங்களிலும் மீன்விற்பனை செய்வது போல, மீன்கள் வைக்கும் ஐஸ் பெட்டியில் மறைத்து வைத்து 660 மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது.

அதைதொடர்ந்து மதுபாட்டில்களை கடத்திய 3 பேர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர், ஆட்டோ ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து நாகூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

3 பேர் கைது

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், காரைக்காலில் இருந்து நாகைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்தது, நாகை தாமரைக்குளம் தென்கரையை சேர்ந்த ஜெயபாண்டி (வயது 43), வெளிப்பாளையம் கூடைமுடைவோர் காலனியை சேர்ந்த கஜேந்திரன் (45), மேலவாஞ்சூர் மில்லு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்வக்குமார் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, ஸ்கூட்டர் மற்றும் 660 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story