ஊத்துக்கோட்டையில் வாலிபர் வெட்டிக்கொலை - 3 பேர் கைது


ஊத்துக்கோட்டையில் வாலிபர் வெட்டிக்கொலை - 3 பேர் கைது
x

ஊத்துக்கோட்டையில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் ராபின் (வயது 24 ). இவர் கும்முடிபூண்டி அருகே உள்ள புதுவாயலில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

அரிவாள் வெட்டு

ராபினின் நண்பரின் திருமண விருந்து நிகழ்ச்சி ஊத்துக்கோட்டை அருகே உள்ள பொந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 31-ந் தேதி இரவு நடைபெற்றது. திருமண விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்ட பின்னர் இரவு சுமார் 11 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் பங்க் அருகே வந்துகொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியதில் ராபின் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரிவாளால் தாக்கிய கும்பல் தப்பி ஓடிவிட்டது.

5 தனிப்படை

இது குறித்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் கண்காணிப்பாளர் சந்திரகாசன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை போலிசார் வழக்குப்பதிவு செய்து ராபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை சம்பவம் நடந்த பெட்ரோல் பங்க் பகுதியிலுள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

கைது

இந்நிலையில் தனிப்படை போலிசார் நடத்திய விசாரணையில் செங்குன்றம் அருகே உள்ள சோழவரத்தை சேர்ந்த கார்த்திக் (23 ), மதுரையை சேர்ந்த சரவணன் (26) ராகுல் (26) ஆகியோர் கொலை செய்தனர் என தெரிய வந்தது.

இதனிடையே இந்த மூன்று பேரும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி பகுதியில் பதுங்கி உள்ளதாக தகவல் தெரிந்ததை அடுத்து நேற்று இரவு அவர்களை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

போலீசார் இந்த மூவரை ஊத்துக்கோட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.


Next Story